பொறாமை" என்றால் என்ன?



நாம் ஆசைப்பட்ட பொருள் அல்லது வாழ்க்கை நமக்கு வாய்க்காமல் போய், அல்லது வாய்ப்பதற்குள்ளாக, வேறொருவருக்கு வாய்ப்பதை நாம் பார்க்கும் போது நம் மனதில் துளிர் விடும் எதிர்மறை உணர்வே "பொறாமை".
*
பெரும்பாலும் நாம் ஆசைப்படும் பொருள் அல்லது நிலை நாம் எதிர்பார்க்கும் நேரத்திற்குள் நமக்கு கிட்டுவதில்லை. அது நமக்கு கிட்டுவதற்கான காலமும் சூழ்நிலைகளும் கைகூடி வரும் போது நிச்சயமாக கிட்டும். அதற்குள்ளாக அது வேறு ஒருவருக்கு கிட்டியதைக் கண்டவுடன் அவர் மீது வெறுப்பு கொள்கிறோம். நாம் எதிர்பார்ப்பது நமக்கும் தகுந்த நேரத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விடுகிறோம்,
*
நம்பிக்கையை இழப்பதால் நாம் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டு நம் வாய்ப்புக்களில் நாமே மண் அள்ளிப் போட்டுக் கொள்கிறோம். நம்முடைய நேரம் வரும் வரை நமக்கு பொறுமை இல்லை. பொறுமை இல்லா இந்நிலையே "பொறாமை".
*
மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளும் குணம் இதற்கு முக்கிய காரணம், எல்லோருக்கும் முன்னால் நமக்கு அது கிடைக்க வேண்டும், எல்லோரையும் விட நம்மை பெரியவனாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற சிந்தனைகள்.
*
இது நல்லதல்ல.
*
இப்படி ஒப்பிட்டுப் பார்க்கும் சிந்தனைகளை குறைத்துக் கொண்டு நம் முயற்சிகளின் மீதே அதிக கவனம் செலுத்த வேண்டும், மற்றவரின் வெற்றியில் நாமும் மகிழ்ச்சி கொண்டு அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
*
சில நேரங்களில் நாம் ஒரு விஷயத்தின் மீது ஆசைப்பட்டு அதை அடைய முயற்சி செய்து கொண்டிருக்கும் போதே வேறொருவர் வந்து அதைத் தட்டிச்செல்வார். அல்லது நாம் அனுபவிக்கும் பொருளையோ, பதவியையோ, நிலையையோ திடீரென்று ஒருவர் வந்து தட்டிப் பறித்துக் கொண்டு, நம்மையும் கீழே தள்ளி விடுவார்.
*
இது போன்ற தருணங்களில் ஏமாற்ற உணர்வுகளும், அதன் பரிணாமமாக பொறாமையும் அந்த மனிதர் மீது வெறுப்புணர்வும் நம் மனதில் தோன்றுவது இயற்கை தான். ஆனால் இந்த எதிர்மறை உணர்வுகளை உத்வேகமாக உருமாற்றி நாம் இழந்ததை திரும்பிப் பெறும் முயற்சிகளில் திசை திருப்ப வேண்டும்.
*
அத்துடன் நம் இழப்பிற்குக் காரணமாயிருந்த நம் கவனக்குறைவோ, சாமர்த்தியமின்மையோ, அல்லது வேறு என்ன மாதிரியான குறையோ, அதை ஆராய்ந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த முறையிலிருந்து அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
*
பொதுவாகவே மற்றவர் என்ன செய்கிறார், யார் யார் வெற்றி பெறுகிறார்கள், தோல்வியுறுகிறார்கள் என்பதையெல்லாம் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்காமல் நம் முயற்சியிலும் நம் உழைப்பிலும் நம் தகுதியை வளர்த்துக் கொள்வதிலுமே கவனம் செலுத்தி விழிப்புணர்வுடன் செயல்பட்டால், எடுத்த காரியங்களிலெல்லாம் நாம் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது, நாம் பொறாமைப்பட வேண்டிய நிலையே வராது.
*
பொறாமை, தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கையின்மை, வெறுப்புணர்வு இது போன்ற எதிர்மறை உணர்வுகளெல்லாம் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்தவை.
*
ஒன்றை வளர விட்டால் மற்றவையும் வளர்ந்து விடும். வளர்ந்து நம் மனம் முழுவதும் பரவி நம்மை கீழான நிலைக்குக் கொண்டு செல்லும்.
*
இந்த எதிர்மறை உணர்வுகளுக்கு மாறாக தன்னம்பிக்கை, திறமையும், உழைப்பும், எங்கிருந்தாலும் பாராட்டுவது, மற்றவர் உயர்வில் நம் உயர்வையும் பார்ப்பது, நட்பு வளையத்தை பெருக்கிக் கொள்வது போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால் பொறாமை நம்மை அண்டாது.

*
*
"புகழ் அனைத்தும் இறைவனுக்கே"..

Popular posts from this blog

ஆண் குழந்தை பெயர்கள்

கணவன் - மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன்